துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளத்தை குறைத்து 230 ரூபாயாக வழங்குவதாக கூறி துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டி ஊராட்சிக்குட்பட்டது வலியாம்பட்டி குக்கிராமம், இந்த கிராமத்தில் சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள், கடந்த நாட்களில் அவர்களுக்கு தினமும் 300 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் சென்ற மாதம் அவர்களுக்கு சம்பளத்தை குறைத்து 230 ரூபாயாக வழங்கப்பட்டதாக கூறுகின்றனர்.
மேலும் கண் கருவிழியை புகைப்படம் எடுத்த பிறகு பணி மேற்கொள்ள அனுமதிப்பதால் காலதாமதம் ஏற்படுவதாகவும், ஓவர்சியர், பணிதல பொறுப்பாளர் ஆகியோர் தரக்குறைவாக பேசுவதாகவும் கூறி துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வலியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பணி நிமித்தமாக வெளியே சென்று இருந்ததால் பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஓவர்சியரை பணியிட மாற்றம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும், கண் கருவிழி புகைப்படம் எடுக்கும் பணியை தவிர்க்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாகவும், அளித்த வாக்குறுதியை அடுத்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர், இதனால் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
