திருச்சியில் புகழ்பெற்ற ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஒருவரின் காம லீலைகள்:
ப்ராஜெக்ட் வேலை என தனது வீட்டுக்கு வரவழைப்பார். அங்கே திராட்சை ஜூஸ் கொடுப்பார். அதில் லேசாக மது அல்லது மயக்க மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்பட்டது. உடன்பாடு ஏற்பட்டால் படுக்கையில் வைத்து சீரழித்து விடுவாராம். இவ்வாறு பல மாணவிகளை இந்த பேராசிரியர் சீரழித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அவமானம் கருதி வெளியே சொல்லாமல் தவிர்த்து வந்தனர். வேறு சிலர் கல்லூரிகளை மாற்றிக்கொண்டு சென்று விட்டனர். எதிர்த்து கேட்கும் மாணவிகளிடம் பெயில் ஆகிவிடுவேன் என மிரட்டி தப்பித்து வந்தார்.
இவரின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரிக்க அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இது இன்னும் அந்த பேராசிரியருக்கு சாதகமாக போய்விட்டது. வீட்டில் தனியாக இருந்ததால் எந்த நேரத்திலும் மாணவிகளை வீட்டுக்கு வரவழைத்து அத்துமீறி உள்ளார். இதில் எம்.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியை மயக்கி தனது வலையில் வீழ்த்தினார். பின்னர் அந்த மாணவியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறி பல நாட்கள் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்ப்பம் தரித்த அந்த மாணவி கடும் அதிர்ச்சிக்குள்ளானார். அப்போது அடுத்த ஆண்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி கருக்கலைப்பு செய்து தப்பினார்.
பின்னர் மீண்டும் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும்போதும் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். மறுபடியும் பொய்களை அவிழ்த்து விட்டு கருக்கலைப்பு செய்ய வைத்தார். கடைசியாக தற்போது எம்.பில். படித்து வரும் அந்த மாணவி மீண்டும் மூன்றாவது முறையாக அந்த பேராசிரியரிடம் சிக்கி கர்ப்பம் அடைந்தார். உடனே மாணவி பேராசிரியரிடம் சென்று திருமணம் செய்து விடுங்கள் என கெஞ்சி கேட்டார். அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த பேராசிரியர் கட்டாயப்படுத்தி மிரட்டி மீண்டும் கருக்கலைப்பு செய்துள்ளார்.
மூன்று முறை கருக்கலைப்பு செய்ததால் அந்த மாணவியின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒருவித இறுக்கத்தில் இருந்த அந்த மாணவியிடம் சக மாணவர்கள் பேச்சு கொடுத்தபோது கல்லூரி பேராசிரியர் தன்னை சீரழித்த தகவலை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதன் மூலம் பேராசிரியரின் காம லீலைகள் வெளி உலகத்திற்கு அம்பலமாகியுள்ளது. அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக முதல்வரை சந்தித்து புகார் அளித்தனர். உடனே முதல்வர் அந்த பேராசிரியரிடம் விசாரணை நடத்த முற்பட்டார்.
ஆனால் மேலிட செல்வாக்கை காட்டி தப்பித்து விட்டார். உடனே பாதிக்கப்பட்ட அந்த மாணவி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார். அதன் பேரில் கல்லூரி கல்வி இயக்குனராக அறிவுறுத்தலின்படி விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு அந்த விசாரணை அறிக்கை உயர்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இடையே கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள இந்த துறை தலைவரின் கீழ் 17 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த 17 பேரும் அவருக்கு எதிராக களத்தில் இறங்கி உள்ளனர்.
இது பற்றி கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, இந்தக் கல்லூரியின் ஆங்கிலத்துறைக்கு என தனி மவுஸ் உள்ளது. இங்கு பிஎச்டி முடித்த மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். ஒழுக்கத்திலும் தமிழக அளவில் இந்த கல்லூரிக்கு நல்ல பெயர் இருந்தது. தற்போது ஒரு பேராசிரியரின் கீழ்த்தரமான நடவடிக்கையால் மனம் வேதனையாக இருக்கிறது. அவரை சஸ்பெண்ட் செய்து வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இருக்கும் மாணவிகளையாவது காப்பாற்ற அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த துறை தலைவரின் சேட்டைகளுக்கு 25 வயது நிரம்பிய கௌரவ பேராசிரியர் ஒருவர் உதவிகள் செய்து வருகிறார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் கல்லூரிக்கு இணையாக போட்டி போடும் இந்த கல்லூரியை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.