திருச்சி மாநகரில் உள்ள உணவு மற்றும் இறைச்சி கடைகளில் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள மாம்பழ கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் திருச்சி பழைய இபி ரோட்டில் உள்ள மாம்பழ கடைகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செயற்கை முறையில் ரசாயன மருந்து தெளித்து பழுக்க வைத்த சுமார் 1200 கிலோ மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு வழக்கு போடுவதற்காக ஒரு சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்த மாம்பழங்களை பறிமுதல் செய்து திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து உணவு வணிகத்தில் ஈடுபடுவோர் இதுபோன்ற செயற்கை முறையில் ரசாயன மருந்து தெளித்து பழுக்க வைத்த பழங்களை பொதுமக்கள் உண்ணும் போது அவர்களுக்கு வயிற்று எரிச்சல் வயிற்றுப் போக்கு காய்ச்சல் மற்றும் தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது புற்றுநோய் வருவதற்கான காரணம் அமைந்துவிடும்.
அதனால் உணவு வணிகர்களும், பொதுமக்களும் இதுபோன்ற பழங்களை விற்கவோ வாங்கவோ கூடாது என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.