நடிகர் விவேக் உயர் ரத்த அழுத்தத்தால் தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக மத்திய அரசின் குழு விளக்கம்

 


தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், சமூக ஆர்வலருமாக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்திருந்தார். இந்த புகாரை ஏற்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இந்த விசாரணை முடிவில் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. அவர் உயர் ரத்த அழுத்தத்தால் தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு விளக்கம் அளித்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post