பருத்தி - மக்காச்சோளத்திற்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்



 தமிழ்நாடு அரசு மக்காச்சோளம் கிலோ ஒன்றுக்கு ரூ 21.50 காசுக்கும், பருத்திக்கு 75 ரூபாயும் வழங்குகிறது. படைப்புழு தாக்குதல் உள்ளிட்டவற்றால் ஏற்கனவே பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் விலையும் குறைவாக வழங்கும் போது கூடுதல் பாதிப்பை தான் விவசாயிகள் சந்திக்கின்றனர்.

எனவே பருத்திக்கு 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயும், மக்காச்சோளத்திற்கு 21 ரூபாயிலிருந்து 30 ரூபாயும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பருத்தி மற்றும் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விலையை உயர்த்தி வழங்கினால் மட்டுமே விவசாயிகள் இலாபகரமாப தொகை பெற முடியும் என தெரிவித்து மக்காச்சோளம் மற்றும் பருத்தியை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து கோரிக்கை வைத்தனர்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சென்னையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.


Post a Comment

Previous Post Next Post