பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. அமிர்தசரஸ் நகரில் உள்ள கோவில் ஒன்றின் வெளியே இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது. அந்த கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள குப்பையில் உடைந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது குறித்து அறிந்த சூரி தமது கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்று கோவில் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் திடீரென அவர் மீது துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த போலீசார் குற்றவாளியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அமிர்தசரஸ் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.