திருச்சி தேசிய கல்லூரியில் வணிகவியல் விவாத மன்றம் தொடக்க விழா


திருச்சி, தேசியக்கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் வணிகவியல் விவாத மன்றத்தின் துவக்க விழா கல்லூரியின் கூட்டரங்கில் நடைபெற்றது. மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவர் ஹரிராம் வரவேற்றார். வணிகவியல்துறைப் பேராசிரியர் முனைவர் இரா.சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக சுய நிதி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ச.கருத்தான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பேசுவது என்பது ஒரு சிறந்த கலை என்றும், ஆய கலைகள் அறுபத்து நான்கில் இல்லாத கலை என்றும் குறிப்பிட்டார்.

பேசுவதற்கு முன் சொற்பொழுவுகளைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும், குரல் வளத்தை சரி செய்து கொள்ள வேண்டும் என்றும், மன ரீதியாகப் பேச தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி பேசுகையில் அரங்கத்தில் உள்ளவர்களை பார்த்து அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பேச வேண்டும் என்றார். 

நேர்முகத்தேர்வில் எவ்வாறு சாதுர்யமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உதாரணத்துடன் விளக்கினார். ஒருங்கிணைப்பாளரான வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வ.மாயக்கண்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 

இரண்டாம் ஆண்டு முதுகலை வணிகவியல் மாணவி திவ்யா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். மூன்றாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் மாணவர் சகாய ராபர்ட் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடைப் போர்த்தினார். மூன்றாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் மாணவி ரித்திகா ஜோஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மூன்றாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் மாணவி மதுமிதா தொகுத்து வழங்கினார். இதில் வணிகவியல் துறை மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.


Post a Comment

Previous Post Next Post