திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சங்கிலியம்மாள். இவர்களுக்கு கார்த்திக் (வயது 20) என்ற மகனும், காயத்திரி (16) என்ற மகளும் உள்ளனர். காயத்திரி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
முருகேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே மாற்றுத்திறனாளியான சங்கிலியம்மாள் தனது 2 குழந்தைகளையும் வளர்த்து வந்தார். குடும்ப வருமானத்துக்காக கார்த்திக் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் காயத்திரி தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். அவர் யாரிடம் பேசுகிறார்? என அவரது உறவினர்கள் நோட்டமிட்ட போது கோவையைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பேசி வந்ததும் அவர்கள் காதலித்து வந்ததும் தெரிய வந்தது.
இதனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது அண்ணன் உறவு முறை கொண்ட பாலமுருகன் (25) என்பவர் கண்டித்துள்ளார். இருந்த போதும் காயத்திரி தொடர்ந்து தனது காதலருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு காயத்திரி தனது காதலனுடன் பேசியுள்ளார். இதனை கவனித்த பாலமுருகன் அவரை கண்டித்ததுடன் தாக்கினார். மேலும் செல்போனை பறித்துக் கொண்டு அவரின் கழுத்தை நெறித்தார்.
இதில் காயத்திரி சுயநினைவின்றி மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே காயத்திரி உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து பழனி டவுன் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். மேலும் அவருடன் செல்போனில் பேசிய நபர் யார்? என்பது குறித்தும், காயத்திரியை வேறு யாரேனும் தாக்கினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.