திருச்சி அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

 


திருச்சி சீனிவாசா நகர் கடவுள் பூங்கா பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா (வயது 37). நேற்று காலை கோகிலா தனது ஸ்கூட்டரில் சீனிவாசா நகர் மெயின்ரோடு வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திவாகரன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கோகிலா மீது மோதியதாக தெரிகிறது. இதில் கோகிலா நிலைதடுமாறி சாலையின் நடுவில் விழுந்தார். இதையடுத்து கோகிலாவுக்கும், அந்த வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் கோகிலாவுக்கு ஆதரவாக பேசியதால் திவாகரன் அங்கிருந்து சென்று விட்டார். 

பின்னர் திவாகரன், கோகிலாவின் விட்டிற்கு அரிவாளுடன் சென்று அவரது ஸ்கூட்டரை வெட்டினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீட்டிற்குள் வீசினார். அந்த பெட்ரோல் குண்டு வீட்டிற்குள் விழுந்து வெடித்தது. சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் திவாகரனை விரட்டிச்சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்

Post a Comment

Previous Post Next Post