அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மகாளய அமாவாசையை அடுத்த நாள் நவராத்திரி விழா தொடங்குவது வழக்கம். அதன்படி நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. நேற்று முதல் 9 நாட்களும் மண்டபத்தில் அம்மன் கொலுவில் இருப்பார். முதல் நாளான நேற்று அம்மன் குமாரி அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி கோவிலின் உள்பிரகாரத்தை வலம் வந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அம்மனை வணங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து கொலு மண்டபத்தை அம்மன் சென்றடைகிறார்.
10-ம் நாளான விஜயதசமி அன்று வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் அம்மன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.நவராத்திரி விழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் உள்பிரகாரம் மின் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.