குடியால் குடும்பம் போச்சு : 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி


 
 

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள போதாவூரை சேர்ந்தவர் முருகபாண்டி (வயது 38). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சத்யா (30). இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகிறது. இனியாஸ்ரீ என்ற 3 வயது மகளும், கனிகாஸ்ரீ என்ற 5 மாத கைக்குழந்தையும் இருந்தது

 


குடிப்பழக்கத்துக்கு அடிமையான முருகபாண்டி தினமும் மதுகுடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை சத்யா கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
குடிபோதையில் வந்த கணவர்
இந்தநிலையில் சுதந்திர தினவிழாவான நேற்று டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இருப்பினும் முருகபாண்டி நேற்றும் அதிகஅளவு மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சத்யா, ‘தினமும் இப்படி மது குடித்து விட்டு வருகிறீர்களே. நமது குழந்தைகளை நினைத்து பாருங்கள்’ என்று கணவரை கண்டித்துள்ளார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மனமுடைந்த சத்யா, தனது 2 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு, அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றார். அங்கு, மனதை கல்லாக்கிக் கொண்டு தனது 2 பெண் குழந்தைகளையும் கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டு தானும் குதித்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்த போது, 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்து  விட்டன. சத்யா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து சத்யாவை உயிருடன் மீட்டனர். பின்னர் 2 குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டன.

அப்போது, 2 குழந்தைகளின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், 2 குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் சத்யா மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 பெண் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Post a Comment

Previous Post Next Post