சென்னை,
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரெம்டெசிவிர் மருந்திற்காக அரசின் மருந்து விற்கும் மையங்களில் நாள் கணக்காக மக்கள் காத்திருக்கும் சூழல் எழுந்துள்ளது. இதனிடையே கள்ளச்சந்தை மூலம் சிலர் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல் மருத்துவ ஆக்சிஜனையும் சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்குவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மை கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர் எதிராகச் செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த் தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கேற்ப, நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.
எளிய மக்கள்கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.
அதேநேரத்தில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதுபோலவே, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.
தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
தமிழகம்