தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை; முதல்- அமைச்சர்

 


தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோச்னை நடத்தினார்.  


தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் 19  மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனையானது நடைபெற்றது. இந்த ஆலோசனையின் போது, தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க  அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.  கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. 

மருத்துவ நிபுணர்கள் குழுவுடனான ஆலோசனை முடிந்துள்ள நிலையில் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, பேசிய முதல் அமைச்சர், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக கூறினார். 

மேலும், அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதே தவிர கட்டுக்குள் வரவில்லை. மக்களின் பாதுகாப்பிற்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இது விடுமுறைக்காலம் அல்ல., கொரோனா காலம். பொதுமக்கள் இதை உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தளர்வுகள் அற்ற ஊரடங்கு அவசியம் என மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post